கிறுக்கல்கள்..

2011-12-13

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்

**
அரைமணி நேரம் பேருந்து பயணத்தில் பக்கத்தில் உட்கார்ந்திருந்து இரண்டு வார்த்தை பேசியவன் கூட இறங்கும் போது போயிட்டு வாரேன்னு சொல்லிட்டுப் போறான்..
ஆனால் ஆன்லைனில் சாட்டிங்கில் வரும் பாழ்ய நண்பர்கள் bye என்று கூட சொல்லாமல் தொடர்பை துண்டித்துவிடுகின்றனர்.

**

கற்பனைகள் அதிகம் வளர்க்காதீர்கள்
அவை கட்டவிழ்த்து விடப்பட்டால்
அடங்குவதும் அடக்குவதும் மிக கடினம்..

**

சும்மா இருக்கும் ஒவ்வொரு கணமும்
எதாவது செய் என்று சொல்கிறது மனம்..

**
ஆழ்ந்த வேலையில் ஈடுபடும் போது
கொஞ்ச ஒய்வு எடுத்துக் கொள் என்கிறது மூளை..

**

கூடுதலா ஒன்று வேண்டுமென்று கூட்டப்பட்டு,
நெருக்கம் பெருக்கலாக நிகழ்த்தப்பட்டு,
விடை தவறானதால்
கழித்து விடப்படுகிறது...!

பெண் சிசுக் கொலை..

**
என்னைப் பார்த்து..,

அவள் முகம் சுழிக்கும் ஒவ்வொரு முறையும்
என் தற்கொலை முயற்சி நிகழ்கிறது..!

அவள் முகம் மலரும் பொழுதெல்லாம்
என் சொர்க்க வாசல் திறக்கப்படுகிறது..!

**
தலையில் ஈரத்துண்டுடன் ,
ஆறு புள்ளி கோலம் வரைந்துவிட்டு,
விரலால் அளக்கப்பட்ட சாணியில்,
செம்பருத்திப் பூவை நட்டு விட்டு சென்று விட்டாள் அந்த தேவதை..

ஈயும் மொய்க்கிறது.. தேனீயும் மொய்க்கிறது..

**
வேர்களை விட விழுதுகளை பிடித்துக்கொள்ளுங்கள்..
எனெனில்
வேர்கள் உங்களை உருவாக்கியது..
விழுதுகள் நீங்கள் உருவாக்கியவை...!

**
உனக்கு சூரியன் உதிப்பது பிடிக்குமா..? மறைவது பிடிக்குமா..? என்று கேட்கும் நண்பனுக்கு எப்படி புரிய வைப்பேன்.
ஒளியை மறைக்க வரும் இருளை விட, இருளை விலக்க வரும் ஒளியே சிறந்தது என்று...!

**
கடல் அருகிலும் ஒரு இனம் இருக்கு,
மலை அருகிலும் ஒரு இனம் இருக்கு,
அவர்களை கண்டுகிடத்தான் ஆள் இல்லை..!

**


வாசிப்பனுபவம்..

| | | 1 பேர் நிழலுக்கு வந்துள்ளனர்








புத்தக வாசிப்பின் இனிமையை திரு. ராஜீமுருகன் இந்த வார ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு சிலிர்த்துப் போனேன். உண்மையான வாசிப்பனும் அடையும் பேரானாந்தத்தை அவர் எழுதிருப்பார்.


நாம் வாங்க நினைக்கும் புத்தகத்தை தேடி அலைந்து திரிந்து கடைசியில் கண்டடையும் போது எற்படும் மன எழுச்சி சொல்லி மாளாது.
வண்ணநிலவனின் காலம் என்ற நாவல் வாங்க நான் ஒரு வருடம் அலைந்தேன். அதைப் படித்துவிட்டு நெல்லையப்பனாக என்னை உருவகப் படுத்திக்கொண்டு பாளை வீதிகளில் அலைந்தேன்.
அதைப் போல் அவருடைய ரெய்னீஸ் ஐயர் தெரு என்ற நாவலும். முருகன்குறிச்சிப் பகுதியில் அமைந்துள்ள அந்த தெருவை பலமுறை கடந்திருந்தாலும், அந்த நாவல் வாசிப்பிற்கு பிறகு அந்த தெருவில் செல்வதை மிக பெருமையாக கருதிக் கொள்வேன். அந்த தெருவில் உள்ளவர்களுக்கெல்லாம் அந்த தெருவைப் பற்றி ஒரு நாவல் வந்துள்ளது என்று தெரியுமா என்று தெரியவில்லை..!!


கண்மணி குணசேகரனின் நெடுஞ்சாலை என்ற நாவலில் போக்குவரத்து உழியர்கள் படும் வேதனையை அத்தனை அழகாக பதிவு செய்திருப்பார். அதை படித்த பின்னர் டிரைவர், கண்டெக்டர் மேல் மரியாதை கொஞ்சம் கூடியது. ஒரு நாள் இரவுப் பேருந்து பயணத்தில் டிக்கெட் எல்லாம் போட்டு விட்டு சாகவாசமாய் என் அருகில் உட்கார்ந்த அந்த கண்டெக்டரிடம் நெடுஞ்சாலை நாவலைப் பற்றி கூறினேன்.
அவர் மிகவும் ஆர்வமுடன் கேட்டார்.
"எங்க பிரச்சினை பற்றிலாம் எழுதிருக்காரா சார், அந்த புக் எங்க சார் கிடைக்கும்... ப்ளீஸ் சொல்லுங்க.." என்று தன் பாதி மை தீர்ந்துப் போன பால் பாயிண்ட் பேனாவால் குறித்துக் கொண்டார் அந்த நீலச்சட்டை கண்டெக்டர். அவர் அதன்பின்னர் அந்த நாவலை வாங்கிருப்பாரா என்று தெரியவில்லை.
ஆனால் என்னை வாசகனாக பெருமைப்பட வைத்த இரவு அது.





எத்தனையோ இரவுப் பயணங்களில் ஜன்னலோர சீட்டில் தலை சாய்த்து படித்த பல நாவல்களை சிந்தித்துக்கொண்டு வந்திருக்கிறேன்.
ஜோ.டி.குருஸின் ஆழி சூழ் உலகு படித்துவிட்டு உவரி கடற்கரையில் போய் இறங்கினது எதற்காக...?
அந்த அந்தோனியார் கோவிலும், கடற்கரை மணலும், அந்த குளிர்ந்த காற்றும் நாவல் படிக்கும் போதும் உணர்ந்தேன்.

ஜெயமோகனின் காடு நாவல் படிக்கும் போது நீலி என்னை கொஞ்சம் பித்து பிடிக்க வைத்தாள்...

இன்னும் எத்தனையோ அனுபவங்கள் சொல்ல சொல்ல மனம் பொங்குகிறது